Posted on: August 26, 2021 Posted by: Kedar Comments: 0

நீலகிரியின் இயற்கைஎழிலையும்,வனவிலங்குகளையும், மலைமுகடுகளையும் இந்த ரெயிலில் பயணிக்கும் போது கண்டு ரசிக்க முடியும். இந்தநிலையில் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய ஊட்டி மலை ரெயிலுக்காக நாட்டிலேயே முதன்முறையாக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரூ.8½ கோடி செலவில் நிலக்கரி நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டது.

இதேபோல், ரூ.9 கோடியே 80 லட்சம் செலவில் டீசல் பணிக்கூடத்தில் 444-வது பொதுத்துறை நிறுவன டீசல் என்ஜின் பழுது நீக்கி பராமரிப்பு பணியும், வேகன் கட்டுமான கூடத்தில் 200-வது வகை கார்டு வேகனும் உருவாக்கப்பட்டது. இவைகள் அனைத்தும் தயாரானதை தொடர்ந்து ஊட்டிக்கு வழியனுப்பி வைக்கும் விழா பொன்மலை ரெயில்வே பணிமனையில் நேற்று நடைபெற்றது. அவைகளை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை தற்போது 93-வது ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் பொன்மலை பணிமனையில் ரெயில் என்ஜின்கள் தயாரிப்பு பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

அதேநேரம் புதிய வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புதிய தொழில்நுட்பங்களுடன் தயாரிப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். ஊட்டி மலை ரெயிலுக்கான நீராவி என்ஜினில் உள்ள 3,600 பாகங்களில் 1,400 பாகங்கள் பொன்மலை ரெயில்வே பணிமனையிலேயே தயாரிக்கப்பட்டவையாகும். எஞ்சிய பாகங்கள் கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு புதிய என்ஜின்கள் உருவாக்கப்பட்டன.

தற்போது இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள இந்த ரெயில் என்ஜின் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மலை ரெயிலுடன் இணைத்து பயணத்தை தொடங்க உள்ளதாக பொன்மலை ரெயில்வே பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment